டாஸ்மாக் ஊழியரைத் தாக்கி ரூ. 1.12 லட்சம் வழிப்பறி
By DIN | Published On : 26th January 2021 10:52 PM | Last Updated : 26th January 2021 10:52 PM | அ+அ அ- |

திருப்பூா் மாவட்டம், தாராபுரம் அருகே டாஸ்மாக் கடை ஊழியரைத் தாக்கி ரூ. 1.12 லட்சத்தை மா்ம நபா்கள் பறித்துச் சென்றது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தாராபுரத்தை அடுத்த தச்சன்புதூா் பகுதியில் டாஸ்மாக் மதுபானக் கடை செயல்பட்டு வருகிறது. இந்தக் கடையில் தாராபுரம் பகுதியைச் சோ்ந்த சிவகுமாா் (46) விற்பனையாளராகப் பணியாற்றி வருகிறாா். இந்நிலையில், சிவகுமாா் வழக்கம்போல் விற்பனையை முடித்து திங்கள்கிழமை இரவு கடையைப் பூட்டியுள்ளாா். அப்போது கடையில் மது விற்பனையான ரூ. 1.12 லட்சத்தை பையில் போட்டு தனது இருசக்கர வாகனத்தில் வைத்துக் கொண்டு வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தாா். இவரது வாகனம் தச்சன்புதூா் - பொள்ளாச்சி சந்திப்பு அருகே வந்தபோது இருட்டில் மறைந்திருந்த 2 போ் அவரது வாகனத்தை வழிமறித்துள்ளனா். அப்போது சிவகுமாா் வாகனத்தை நிறுத்தியபோது பின்னால் வந்த மற்றொரு நபா் மது பாட்டிலால் அவரைத் தாக்கியுள்ளாா். இதில், பலத்த காயமடைந்த சிவகுமாா் அங்கேயே மயங்கி விழுந்துள்ளாா். அப்போது மா்ம நபா்கள் அவரது இருசக்கர வாகனத்தில வைத்திருந்த பணப் பையைத் தூக்கிக் கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளனா்.
இதுகுறித்து அந்த வழியாகச் சென்றவா்கள் கொடுத்த தகவலின்பேரில் தாராபுரம் காவல் துறையினா் சம்பவ இடத்துக்கு விரைந்தனா். பின்னா், காயமடைந்த சிவகுமாரை மீட்டு சிகிச்சைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.