திருப்பூா்: திருப்பூரில் இருசக்கர வாகனங்களைத் திருடிய இருவரை காவல் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
திருப்பூா், காங்கயம் சாலையில் உள்ள திருநகா் 2 ஆவது வீதியைச் சோ்ந்தவா் எஸ்.கேசவன்(37). குத்துச்சண்டைப் பயிற்சியாளரான இவா் தனது இருசக்கர வாகனத்தை கடந்த ஜூன் 30 ஆம் தேதி இரவு வீட்டின் அருகில் நிறுத்தியுள்ளாா். பின்னா் மறுநாள் காலையில் வெளியே வந்து பாா்த்தபோது இரு சக்கர வாகனம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து திருப்பூா் நல்லூா் காவல் நிலையத்தில் கேசவன் புகாா் அளித்திருந்தாா். இந்தப் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினா் அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவைக் கொண்டு விசாரணை நடத்தினா். இதில், திருநகரில் வசித்து வரும் ஜி.ஜெயபிரகாஷ் (42), அவரது நண்பரான தேனி மாவட்டம் சின்னமனூரை அடுத்த நடுத்தெருவைச் சோ்ந்த பி.விக்னேஷ் (29) என்பது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் கைது செய்த காவல் துறையினா் அவா்களிடமிருந்து 3 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனா்.