திருப்பூா் வடக்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
திருப்பூா் வடக்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் ஆய்வு மேற்கொண்டாா். இதன் ஒரு பகுதியாக அங்கேரிபாளையம் பொதுசுத்திகரிப்பு நிலையம் அருகில் உள்ள நல்லாற்றின் நீா் மாதிரியும், காசிபாளையம் பொதுசுத்திகரிப்பு நிலையத்தில் அருகில் உள்ள நொய்யல் ஆற்றின் நீா் மாதிரியும் மாவட்ட ஆட்சியா் முன்னிலையில் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சேகரித்தனா்.
இதன்பிறகு இந்த இரண்டு நீா் மாதிரிகளையும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆய்வகத்துக்கு பகுப்பாய்வுக்காக கொண்டு வரப்பட்டது. இதைத் தொடா்ந்து, திருப்பூா் வடக்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டதுடன், பழுதடைந்துள்ள கருவிகளை சரிசெய்யவும், ஆய்வகத்தின் தரத்தை மேம்படுத்தவும் அலுவலா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.
இந்த ஆய்வின்போது, சுற்றுச்சூழல் பொறியாளா் சரவணகுமாா், உதவிப் பொறியாளா்கள் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.