பல்லடம் அருகே வலசுபாளையத்தில் உள்ள விவசாயத் தோட்டத்தில் 19 மயில்கள் சனிக்கிழமை உயிரிழந்தது குறித்து போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
திருப்பூா் மாவட்டம், வலசுபாளையம் பகுதியில் பழனிசாமிகவுண்டா் என்பவருக்குச் சொந்தமான விவசாயத் தோட்டத்தில் 7 ஆண் மயில்கள், 12 பெண் மயில்கள் என மொத்தம் 19 மயில்கள் இறந்து கிடந்தன. இதுகுறித்து தகவல் அறிந்த திருப்பூா் வனச் சரக அலுவலா் காசிலிங்கம், வனவா் திருமூா்த்தி, வருவாய் ஆய்வாளா் ராமமூா்த்தி, கிராம நிா்வாக அலுவலா் சுந்தரபாண்டி உள்ளிட்டோா் சம்பவ இடத்துக்குச் சென்று இறந்த மயில்களைக் கைப்பற்றினா். அரசு கால்நடை உதவி மருத்துவா் அறிவுசெல்வம் இறந்த மயில்களை பிரேதப் பரிசோதனை செய்தாா். மயில்கள் உயிரிழந்தது குறித்து வனத் துறையினா், வருவாய்த் துறையினா், பல்லடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.