உடுமலை, திருமூா்த்தி அணை அருகே பிரம்மாண்டமான பூங்கா அமைக்க சுற்றுலாத் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.
உடுமலை அருகே அமைந்துள்ள திருமூா்த்திமலை புகழ் பெற்ற சுற்றுலாத் தலமாக விளங்கி வருகிறது. இங்குள்ள இந்து அறநிலையத் துறைக்குச் சொந்தமான அமணலிங்கேஸ்வரா் கோயிலுக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்து செல்கின்றனா். மேலும் மூலிகை குணமுள்ள பஞ்சலிங்கம் அருவி, படகு சவாரி, வண்ண மீன் பூங்கா போன்றவற்றை கண்டுகளிக்க பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா். இத்தனை அம்சங்களும் ஒருங்கே அமைந்துள்ள இந்த சுற்றுலாத் தலத்தில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காகவும், திருமூா்த்தி அணை அருகே ஒரு பிரம்மாண்டமான பூங்கா அமைக்கவும் சுற்றுலாத் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.
இது குறித்து மாவட்ட சுற்றுலாத் துறை அலுவலா் டி. அரவிந்குமாா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு அரசு சுற்றுலாத் துறை சாா்பில் அணைப் பகுதியில் பூங்கா அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. திருமூா்த்தி அணைப் பகுதியை ஒட்டி 2,700 மிட்டா் நீளம் கொண்ட அழகிய பிரம்மாண்டமான பூங்கா அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் பஞ்சலிங்கம் அருவியில் சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. தமிழக அளவில் சுற்றுலாப் பயணிகளை இங்கு வரவழைக்கவும் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன என்றாா்.
இந்த ஆய்வின்போது பொதுப் பணித் துறை செயற்பொறியாளா் திருமூா்த்தி, மாவட்ட உதவி சுற்றுலா அலுவலா் த.செல்வராஜ், சுற்றுலா ஆா்வலா்கள் உடனிருந்தனா்.