வெள்ளக்கோவில் ஸ்ரீ வீரக்குமார சுவாமி கோயில் நிலத்தில் வாகனங்களை நிறுத்த அறநிலையத் துறை அதிகாரிகள் தடை விதித்துள்ளனா்.
காங்கயத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வீரக்குமார சுவாமி கோயிலுக்குச் சொந்தமாக பல ஏக்கா் காலி நிலம் உள்ளது. நகரின் முக்கியப் பகுதியில் அமைந்துள்ள இந்த நிலத்தை வெள்ளக்கோவில் லாரி, டெம்போ, ஜெசிபி வாகனம், காா், சுற்றுலா வாடகை வாகனங்களின் உரிமையாளா்கள் வாகன நிறுத்தமாகப் பயன்படுத்தி வருகின்றனா்.
அங்கு மது அருந்துதல் உள்ளிட்ட சமூக விரோத செயல்கள் நடப்பதால் வழிபாட்டுத் தலத்தின் புனிதத் தன்மை பாதிக்கப்பட்டது. இதனால் அறநிலையத் துறை இணை ஆணையா் உத்தரவுப்படி, கோயில் நிலத்தில் வாடகை வாகனங்கள் நிறுத்தத் தடை விதிக்கப்பட்டது.
இது குறித்து கோயில் செயல் அலுவலா் மு.ரத்தினாம்பாள் முறையாகத் தெரிவித்தும் விதி மீறல்கள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் வெள்ளிக்கிழமை சம்பவ இடத்துக்கு வந்த அறநிலையத் துறை அதிகாரிகள் கோயில் நிலத்தில வாகனங்கள் நிறுத்துவோா் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனா்.