திருப்பூர்: தமிழகத்தில் மோட்டார் தொழிலாளர்கள் அனைவருக்கும் கரோனா நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்று ஏஐடியூசி தொழிற்சங்கம் வலியுறுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்ட ஏஐடியூசி தனியார் மோட்டார் தொழிலாளர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் மாவட்ட அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக்கூட்டத்துக்கு அச்சங்கத்தின் தலைவர் கே.சுரேஷ் தலைமை வகித்தார்.
இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் விவரம்: சங்கத்தின் ஸ்டேண்டு கிளை மகாசபை கூட்டங்களை வரும் ஆகஸ்ட் 30-க்குள் நடத்தி முடித்து செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் தலைமை மகாசபை நடத்த வேண்டும். கரோனா பொதுமுடக்கம் காரணமாக மோட்டார் தொழிலாளர்களின் வாழ்வாதரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆகவே, தமிழகத்தில் உள்ள மோட்டார் தொழிலாளர்கள் அனைவருக்கும் கரோனா நிவாரணத் தொகை வழங்க வேண்டும்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் குறைக்க வேண்டும். அதே போல், நலவாரியத்தில் பதிவு செய்யும் ஓட்டுநர்களுக்கு உறுப்பினர் அடையாள அட்டையும், பணப்பலன்களையும் காலதாமதம் இல்லாமல் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதில், ஏஐடியூசி மாவட்டத் தலைவர் சி.பழனிசாமி, ஏஐடியூசி மாவட்ட பொதுச் செயலாளர் என்.சேகர், மாவட்ட பொருளாளர் பி.ஆர்.நடராஜன், மோட்டார் சங்க பொதுசெயலாளர் வி.எஸ்.சசிகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.