அவிநாசியில் முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் ப.தனபால் தலைமையில் ஆர்ப்பாட்டம்
திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி, முன்னாள் சட்டப் பேரவைத் தலைவரும், சட்டப் பேரவை உறுப்பினருமான ப.தனபால் தலைமையில் அவிநாசியில் அதிமுகவினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாவட்டம், அவிநாசி வட்டம் ராக்கியாபாளையம் சொர்ணபுரி ரிச்லேண்ட் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அவிநாசி சட்டப் பேரவை உறுப்பினர் ப.தனபால் தலைமை வகித்தார்.
ஒன்றிய செயலாளர்கள் அ.ஜெகதீசன்(மேற்கு), சேவூர் ஜி.வேலுசாமி(வடக்கு), முன்னாள் மாவட்ட மகளரணி செயலாளர் லதா சேகர், ஊராட்சி மன்றத் தலைவர் ரவி, துணைத் தலைவர் கனகராஜ், தகவல் தொழில் நுட்பப் பிரிவு முன்னாள் மண்டல பொறுப்பாளர் லோகேஷ் தமிழ்செல்வன், பொறுப்பாளர்கள் எம்கேஎம் கணேசன், ஹரி, துரைபாண்டியன், கார்த்தி உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
இதேபோல சேவூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், நீட் தேர்வு ரத்து, பெண்களுக்கு மாதம் ரூ.1000, பெட்ரோல் டீசல் விலை குறைப்பு உள்ளிட்டவைகளை வலியுறுத்தியும், திமுக அரசை கண்டித்தும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.