திருப்பூர் தென்னம்பாளையம் பகுதியில் கொலை செய்யப்பட்ட இளைஞரின் சடலத்தை காவல் துறையினர் புதன்கிழமை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர், தென்னம்பாளையம் உழவர் சந்தைக்கு பின்புறமாக உள்ள ஏபிடி சாலையில் உள்ள பழைய துணிகளை பிரிக்கும் குடோனில் பலத்த காயங்களுடன் இளைஞரின் சடலம் கிடப்பதை அந்த வழியாகச் சென்றவர்கள் பார்த்துள்ளனர்.
இதுகுறித்து திருப்பூர் தெற்கு காவல் துறையினருக்கும் தகவல் கொடுத்துள்ளனர். இதன் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த காவல் துறையினர் இளைஞரின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவர் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதைத்தொடர்ந்து, நடத்திய விசாரணையில், எம்.ஜி.ஆர்.காலனியைச் சேர்ந்த சம்சுதீன்(23) என்பது தெரியவந்தது.
மேலும், இவர் காலையில் நண்பர்களுடன் வெளியே வந்த நிலையில் அவரது செல்லிடப்பேசி எண் அனைத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்தது. ஆகவே, சம்சுதீனைக் கொலை செய்த நபர்கள் யார் என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.