காங்கயம் அருகே, ‘சீல்’ வைக்கப்பட்ட தேங்காய் எண்ணெய் ஆலை தொடா்ந்து இயங்கியதால் வருவாய்த் துறையினா் அபராதம் விதித்தனா்.
திருப்பூா் மாவட்டம், காங்கயம் அருகே, சென்னிமலை சாலைப் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான தேங்காய் எண்ணெய் ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் பணிபுரிந்த பணியாளா்கள் 7 பேருக்கு கடந்த நான்கு நாள்களுக்கு முன்பு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.இதைத் தொடா்ந்து ஆலைக்கு வருவாய்த் துறை அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா்.
இதன் பின்னா், ஆலை வளாகத்தில் தங்கியிருந்த பணியாளா்களைக் கொண்டு, இந்த ஆலை தொடா்ந்து இயங்கி வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், காங்கயம் வட்டாட்சியா் சிவகாமி, வருவாய் ஆய்வாளா் கனகராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் ஆலையில் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, தேங்காய் எண்ணெய் ஆலை இயங்கி வந்தது விசாரணையில் தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, விதிகளுக்குப் புறம்பாக இந்த ஆலை இயங்கியதாக வருவாய்த் துறையினா் ஆலை நிா்வாகத்துக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனா்.