திருப்பூர்: திருப்பூர் மாவட்ட ஆட்சியர் பெயரில் முகநூலில் போலிக் கணக்கு தொடங்கி பணம் கேட்டு மோசடி செய்த நபர் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் க. விஜயகார்த்திகேயன் பெயரில் மர்ம நபர் ஒருவர் போலியாக கணக்கு ஒன்றைத் தொடங்கியுள்ளார். இதில், மாவட்ட ஆட்சியரின் புகைப்படத்தையும் பதிவிட்டு மெசஞ்சர் மூலமாக அவருடன் தொடர்பில் இருந்த சமூக ஆர்வலருக்கு திங்கள்கிழமை குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.
இதில், நான் அவசரமான சூழ்நிலையில் உள்ளதால் எனக்கு ரூ.15 ஆயிரம் பணம் வேண்டும். ஆகவே, 91150-82616 என்ற எண்ணில் சிவா ரெட்டி என்ற பெயருக்கு கூகுள் பே மூலம் பணம் அனுப்புங்கள் நாளை காலை திருப்பிக் கொடுத்து விடுகிறேன் எனக் கூறியுள்ளார். ஆனால், சமூக ஆர்வலருக்கு ஆட்சியரைப் பற்றி நன்கு தெரிந்திருந்ததால் பணம் அனுப்பவில்லை. இதையடுத்து, மாவட்ட ஆட்சியருக்கும் அவர் இதுபற்றி தகவல் தெரிவித்தார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் க. விஜயகார்த்திகேயன் முகநூல் பதிவில் கூறியுள்ளதாவது:
"இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினரிடமும், முகநூல் நிறுவனத்திடமும் புகார் அளித்துள்ளேன். ஆகவே, பொதுமக்கள் யாரும் ஏமாற வேண்டாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.