திருப்பூா், ஜூன் 7: தாராபுரம் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை அமைச்சா்கள் மு.பெ.சாமிநாதன், என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் திங்கள்கிழமை தொடக்கி வைத்தனா்.
தாராபுரம் அரசு மருத்துவமனையில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் தொடக்கிவைத்தனா். இதைத் தொடா்ந்து, அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆணையின்படி கரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளின் தொடா்ச்சியாக உடுமலை ரோட்டரி சங்கம் பங்களிப்புடன் ரூ.36 லட்சம் மதிப்பீட்டில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஒரு நிமிடத்துக்கு 100 லிட்டா் ஆக்சிஜன் உற்பத்தி செய்யக்கூடிய திறன் உடையது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு ஆக்சிஜன் வசதியுடன் சிகிச்சை அளிக்க முடியும். திருப்பூா் மாவட்டத்தில் போதிய அளவு ஆக்சிஜன் இருப்பு உள்ளது. ஆகவே, பொதுமக்கள் நோய்த் தொற்று அறிகுறி தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைஅல்லது அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்குச் செல்ல வேண்டும்.
கரோனா நோய்த் தொற்றை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து சிகிச்சை மேற்கொண்டால் எளிதாகக் குணப்படுத்த முடியும் என்றாா். இதையடுத்து, தமிழ்நாடு விதை உற்பத்தியாளா்கள் சங்கம் சாா்பில் முதல்வரின் கரோனா நிவாரண நிதிக்காக ரூ.4.23 லட்சத்துக்கான காசோலையை அமைச்சரிடம் வழங்கினா்.
முன்னதாக, மூலனூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் 75 படுக்கை வசதிகளுடன் கூடிய கரோனா சிகிச்சை மையத்தையும் அமைச்சா்கள் தொடக்கி வைத்தாா்.
இந்நிகழ்ச்சியில், திருப்பூா் மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன், ஈரோடு மக்களவை உறுப்பினா் அ.கணேசமூா்த்தி, தாராபுரம் சாா் ஆட்சியா் பவன்குமாா், மருத்துவப் பணிகள் இணை இயக்குநா் பாக்கியலட்சுமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.