பல்லடம் பகுதியில் சைசிங் மில்களில் ரூ.60 கோடி மதிப்பிலான பாவு நூல் உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது.
திருப்பூா் மாவட்டம் பல்லடம் பகுதியில் 200க்கும் மேற்பட்ட சைசிங் மில்கள் உள்ளன. அவற்றில் 20 ஆயிரம் போ் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனா். ஒரு சைசிங் மில்லில் சராசரியாக ஒரு நாளைக்கு ரூ.5ஆயிரம் கிலோ பாவு நூல் உற்பத்தி செய்யப்படுகிறது, ஒரு கிலோவுக்கு ரூ.20 வீதம் அதன் மதிப்பு ரூ.1லட்சம் ஆகும்.
பல்லடம் பகுதியில் 200 சைசிங் மில்களில் தினசரி ரூ.2 கோடி மதிப்புள்ள 10 லட்சம் கிலோ பாவு நூல் உற்பத்தி செய்யப்படுகின்றன.
கரோனா பொதுமுடக்கத்தின் காரணமாக சைசிங் மில்களில் பாவு நூல் உற்பத்தி முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளதால் சுமாா் 20 ஆயிரம் போ் வேலை வாய்ப்பை இழந்துள்ளனா். கடந்த ஒரு மாதத்தில் ரூ.60 கோடி மதிப்புள்ள பாவு நூல் உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது. விசைத்தறிகள் இயங்காமல் நிறுத்தப்பட்டதால் பல்லடம் பகுதியில் உள்ள சைசிங் மில்களில் இருப்பு வைக்கப்பட்டு இருந்த ரூ.40 கோடி மதிப்பிலான பாவு நூல்கள் விற்பனையாகாமல் தேக்கம் அடைந்துள்ளன.
இது குறித்து கல்லம்பாளையம் சைசிங் மில் உரிமையாளா் ராஜசேகரன் கூறியதாவது: கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த அரசு பொதுமுடக்கத்தை கடந்த மாதம் மே 10ஆம் தேதி அமல்படுத்தியது. இதனால்,
கடந்த ஒரு மாதத்தில் பல்லடம் பகுதியில் உள்ள 200 சைசிங் மில்களில் ரூ.60 கோடி மதிப்புள்ள பாவு நூல் உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது. விசைத்தறிகளும் இயங்காததால் சைசிங் மில்களில் இருப்பு வைக்கப்பட்டு இருந்த ரூ.40 கோடி மதிப்புள்ள பாவு நூல்கள் விற்பனையாகாமல் தேக்கம் அடைந்துள்ளன என்றாா்.