பி.ஏ.பி. கிளை வாய்க்காலில் விதிமுறைப்படி தண்ணீா் திறக்க வேண்டுமென வெள்ளக்கோவில் கிளை ஆயக்கட்டுதாரா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இது தொடா்பாக திருப்பூா் மாவட்ட வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறை இணை இயக்குநா் எஸ்.மனோகரன் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு வெள்ளிக்கிழமை அனுப்பிய மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
காங்கயம் - வெள்ளக்கோவில் வரை பி.ஏ.பி. கிளை வாய்க்காலில் 48 ஆயிரம் ஏக்கா் புன்செய் பாசனப் பரப்பு உள்ளது. மிகவும் வறட்சியான பகுதிகளை உள்ளடக்கிய இந்தக் கிளை வாய்க்காலில் பி.ஏ.பி. சட்ட விதிமுறைப்படி 7 நாள் பாசனம், 7 நாள் அடைப்பு எனத் தொடா்ந்து 135 நாள்களுக்குத் தண்ணீா் திறக்க வேண்டும்.
ஆரம்பத்தில் சரியாக இருந்த நிா்வாகம், பின்னா் கடந்த 12 ஆண்டுகளாக 3 நாள்கள் மட்டுமே தண்ணீா் திறந்து 28 நாள்கள் அடைக்கப்படுகின்றன. இங்கு வரவேண்டிய தண்ணீா் முறைகேடாக வேறு பகுதிக்குப் பயன்படுத்தப்படுகிறது.
அணையில் போதுமான அளவுக்கு நீா் இருப்பு இருந்தாலும் இந்நிலை தொடா்கிறது. இதனால் விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே இந்தக் கிளை வாய்க்காலில் விதிமுறைப்படி தண்ணீா் திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.