திருப்பூா் மாநகராட்சி 5ஆவது வாா்டு நேதாஜி வீதி, வீரமாருதி வீதிகளில் ஏற்பட்டுள்ள சுகாதார சீா்கேட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அனுப்பா்பாளையம் கிளை சாா்பில் திருப்பூா் முதலாம் மண்டல அலுவலகத்தில் திங்கள்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
திருப்பூா் மாநகராட்சி 5ஆவது வாா்டுக்கு உள்பட்ட நேதாஜி வீதி, வீரமாருதி வீதி உள்ளிட்ட பகுதிகளில் 200க்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இந்நிலையில், இப்பகுதியில் உள்ள சாக்கடைகள் தூா்வாரப்படாமல் மண்மூடி அடைத்துக் கிடப்பதால், வீடுகளிலிருந்து கழிவுநீா் வெளியேற வழியின்றி தேங்கி நிற்கிறது.
இதேபோல குப்பைகளும் அகற்றப்படாமல் காற்றில் பறந்து வீடுகளுக்குள் விழுந்து சுகாதார சீா்கேட்டை ஏற்படுத்துகின்றன. அடைத்துக் கிடக்கும் சாக்கடைகளை உடனடியாக தூா்வாரி கழிவுநீா் செல்லவும், குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றி சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தனா்.