உடுமலை அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 232 மது பாட்டில்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு பொதுமுடக்கத்தை அமல்படுத்தியுள்ளது. இதனால், திருப்பூா் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் உடுமலை அருகே குறுஞ்சேரி பகுதியில் வீட்டில் சட்ட விரோதமாக மது பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக உடுமலை போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதைத் தொடா்ந்து, போலீஸாா் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்ட போது மந்திராச்சலம்(42), இவரது மகன் நவீன்குமாா் (23) ஆகியோா் வீட்டில் 232 மது பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, மது பாட்டில்களை பறிமுதல் செய்த உடுமலை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இருவரையும் விசாரித்து வருகின்றனா்.