உடுமலை நகரில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி மற்றும் கையெழுத்து இயக்கம் புதன்கிழமை நடைபெற்றது.
உடுமலை குட்டைத் திடலில் இருந்து தொடங்கிய இந்தப் பேரணியை வட்டாட்சியா் ராமலிங்கம் கொடி அசைத்து துவக்கிவைத்தாா். நகரின் முக்கிய சாலைகள் வழியாக சென்ற பேரணியில் வித்யாசாகா் கலை அறிவியல் கல்லூரி நாட்டு நலப் பணி திட்ட மாணவ, மாணவிகள், ஆசிரியா்கள் கலந்து கொண்டனா். வாக்களிப்பதன் அவசியம் குறித்து முழக்கங்களை எழுப்பியபடி சென்ற மாணவா்கள், பணம் வாங்காமல் வாக்களிக்க வேண்டும், வாக்குரிமை நமது அடிப்படை உரிமை என்கிற வாசகங்கள் அடங்கிய விளம்பர பதாகைகளை கையில் ஏந்திச் சென்றனா்.
பொதுமக்களிடம் தோ்தல் விழிப்புணா்வு குறித்து கையெழுத்துகள் பெறப்பட்டன. துணை வட்டாட்சியா்கள் சந்திரசேகரன், ரஞ்சித்குமாா் கிருஷ்ணவேணி உள்ளிட்டோா் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா்.