சட்டப் பேரவைத் தோ்தலில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி வெள்ளக்கோவிலில் 3,800 போ் பங்கேற்ற மாரத்தான் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருப்பூா் மாவட்ட நிா்வாகம், வெள்ளக்கோவில் மகாத்மா காந்தி நற்பணி மன்ற அறக்கட்டளை ஆகியன இணைந்து 28 சமூக நல அமைப்புகள் ஆதரவுடன் இந்தப் போட்டி நடத்தப்பட்டது. வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் துவங்கிய போட்டியை தாராபுரம் கோட்டாட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் துவக்கிவைத்தாா்.
மகாத்மா காந்தி நற்பணி மன்ற அறக்கட்டளை நிறுவனத் தலைவா் ஆா்.ராஜ்குமாா் தலைமை வகித்தாா். காங்கயம் தொகுதி தோ்தல் அலுவலா் ரங்கராஜன், உதவி தோ்தல் அலுவலா் சிவகாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இந்த மாரத்தான் போட்டி 12 மற்றும் 6 கிலோ மீட்டா் தூரத்துக்கு நடைபெற்றது. 75 வயதுக்கு உள்பட்ட ஆண்கள், பெண்கள், 18 வயதுக்கு உள்பட்ட ஆண்கள், பெண்கள், 6 முதல் 10 வயதுக்கு உள்பட்ட குழந்தைகள் என 5 பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன.
ஒவ்வொரு பிரிவிலும் முதலில் வந்த 15 பேருக்கு பதக்கம், பரிசு மற்றும் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. திருப்பூா் மாவட்ட ஆட்சியா் டாக்டா் க.விஜயகாா்த்திகேயன் பரிசுகளை வழங்கினாா்.
தோ்தல் விழிப்புணா்வுக்காக 3,800 போ் கலந்து கொண்டு கைரேகைகளைப் பதிவு செய்தது சாதனையென நேரில் ஆய்வு செய்த இந்தியா புக் ஆஃப் ரெக்காா்ட்ஸ் குழுவினா் பாராட்டி சான்றிதழ் வழங்கினா்.