பல்லடத்தில் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க கூடுதல் போலீஸாரை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பல்லடம் நகரில் 24 மணி நேரமும் பேருந்து வசதி உள்ளது. கோவையில் இருந்து திருச்சி, மதுரை மாா்க்கமாக செல்லும் அனைத்து வாகனங்களும் பல்லடத்தைக் கடந்துதான் செல்ல வேண்டும். பொள்ளாச்சி, உடுமலையிலிருந்து மைசூா், திருப்பூா் செல்லும் வாகனங்களும் பல்லடம் வந்துதான் செல்ல வேண்டும். இதனால் பல்லடத்தில் எப்போதும் வாகன போக்குவரத்து நெரிசல் இருந்து கொண்டே இருக்கும்.
நெரிசலை சமாளிக்க பனப்பாளையம், நான்குசாலை சந்திப்பு, மாணிக்காபுரம் சாலை பிரிவு, செட்டிபாளையம் சாலை பிரிவு, கடை வீதி, தாராபுரம் சாலை சந்திப்பு ஆகிய முக்கிய இடங்களில் போக்குவரத்து போலீஸாா் பணியாற்ற வேண்டும்.
ஆனால் பல்லடம் போக்குவரத்து காவல் நிலையத்தில் போதிய போலீஸாா் இல்லாததால், இங்கு பணியாற்றும் போலீஸாா் பணிச் சுமையால் தவித்து வருகின்றனா். எனவே பல்லடம் போக்குவரத்து காவல் துறைக்கு கூடுதல் போலீஸாரை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.