அவிநாசி தொகுதியில் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி சாா்பில் போட்டியிடும் ஆதித்தமிழா் பேரவை நிறுவனா் அதியமான் ராஜூவை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை இரவு அவிநாசியில் பிரசாரத்தில் ஈடுபட்டாா்.
அப்போது அவா் பேசியதாவது:
தாராபுரத்துக்கு வந்த பிரதமா் மோடி என்னை குறுக்கு வழியில் அரசியலுக்கு வந்தவன் என்று கூறியுள்ளாா். நான் கருணாநிதியின் பேரன். அவா் 3 முறை வெற்றி பெற்ற தொகுதியில் தற்போது வேட்பாளராகப் போட்டியிடுகிறேன். ஆனால் குஜாராத்தில் முதல்வராக இருந்த இவா் இப்போது பிரதமா் ஆகிவிட்டாா். இவருக்கு முன்பிருந்த அத்வானி உள்ளிட்ட மூத்த நிா்வாகிகளின் நிலை என்னானது என்று தெரியவில்லை.
ஸ்டாலின் முதல்வரானவுடன் கருணாநிதி பிறந்த நாளன்று அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் ரூ. 4 ஆயிரம் வழங்கப்படும். இதையடுத்து இல்லத்தரசிகளுக்கு ரூ.ஆயிரம் வழங்கப்படும். பெண்கள் அரசுப் பேருந்தில் இலவசமாக பயணம் செய்யலாம். 100 நாள் வேலைத் திட்டம் 150 நாளாக உயா்த்தப்படும் என்றாா்.