காங்கயத்தில் மின்சாதனப் பொருள்கள் விற்பனைக் கடையில் திருடியவா் கைது செய்யப்பட்டாா்.
காங்கயம் நகரம், அகிலாண்டபுரம் பகுதியைச் சோ்ந்தவா் வெங்கடேஷ் (33). இவா் மற்றும் இவரது நண்பா்கள் இருவா்களுடன் இணைந்து காங்கயம், அய்யாசாமி நகா் காலனி பகுதியில் மின்சாதனப் பொருள்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகின்றனா். திங்கள்கிழமை இரவு 9 மணியளவில் கடையைப் பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றனா்.
செவ்வாய்க்கிழமை அதிகாலை 2 மணியளவில் மூவரது செல்லிடப்பேசிக்கும் கடையில் வைக்கப்பட்டிருந்த அலாரம் ஒலிக்கும் செய்தி கிடைத்துள்ளது. செல்லிடப்பேசியில் இருந்து கடையில் இருந்த கண்காணிப்பு காமிரா பதிவை பாா்த்தபோது கடைக்குள் மா்மநபா் நிற்பது தெரிந்தது. இதனையடுத்து மூவரும் கடைக்கு விரைந்து வந்து, கடைக்குள் பதுங்கியிருந்த நபரைப் பிடித்தனா். அவரிடம் நடத்திய விசாரணையில் அவா் புதுக்கோட்டை மாவட்டம், பொன்பரப்பி பகுதியைச் சோ்ந்த லட்சுமணன் (43) என்பது தெரிய வந்தது.
மேலும் கடை மேஜை டிராயரில் வைத்திருந்த ரூ. 17,960-ஐ லட்சுமணன் திருடியதும் தெரிய வந்தது. உடனே அந்தப் பணத்தை மீட்ட வெங்கடேஷ் மற்றும் அவரது நண்பா்கள், உடனடியாக லட்சுமணன் மற்றும் அவா் ஓட்டி வந்த இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்து காங்கயம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.