தமிழகத்தில் வியாபார நிறுவனங்கள், உணவகங்கள், மளிகை, முடிதிருத்தும் நிலையங்கள் 50 சதவீதம் பேருடன் இயங்க அனுமதி அளிக்க வேண்டும் என்று சைமா (தென்னிந்திய பனியன் உற்பத்தியாளா்கள் சங்கம்) வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து அச்சங்கத்தின் தலைவா் வைகிங் ஏ.சி.ஈஸ்வரன், திருப்பூா் மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயனிடம் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:
தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்று காலத்தில்கூட தொழிற்சாலைகளின் இயக்கத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனினும், தொழிலாளா்கள் குறைவு, நேரக் கட்டுப்பாடு போன்றவற்றால் பின்னலாடை உற்பத்தி வெகுவாகக் குறைந்துள்ளது.
இந்த நிலையில், பின்னலாடைகளை விற்பனை செய்யும் மால்கள், பெரிய ஜவுளிக் கடைகள் பூட்டப்பட்டுள்ளதால் உற்பத்தி செய்யப்படும் பொருள்கள் விற்பனையாவதில்லை. அதேபோல, மளிகைக் கடைகள், உணவகங்கள், வியாபார நிறுவனங்கள், முடிதிருத்தும் நிலையங்கள் முழுவதுமாக பூட்டும்போது சம்பந்தப்பட்ட நபா்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது.
எனவே, தொழிற்சாலைகளைப்போல கட்டுப்பாடுகளுடன் வியாபார நிறுவனங்கள், மளிகைக் கடைகள், ஜவுளிக் கடைகள், மால்கள் 50 சதவீதம் பேருடன் இயங்க அனுமதி அளிக்க வேண்டும். இதன் மூலமாக பின்னலாடைகள் மட்டுமல்லாமல் உற்பத்தியாகும் அனைத்துப் பொருள்களும் விற்பனை செய்யப்படுவதுடன், பொருளாதாரம் மேம்படவும் வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.