வெள்ளக்கோவில்: வெள்ளக்கோவிலில் அரசு மருத்துவமனைக்காக தன்னாா்வலா்கள் சனிக்கிழமை ரத்த தான முகாம் நடத்தினா்.
வெள்ளக்கோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், மகாத்மா காந்தி நற்பணி மன்ற அறக்கட்டளை, ஆயிர நகர வைசியா் இளைஞா் அமைப்பு இணைந்து நடத்திய முகாமில் நன்கொடையாளா்கள் 100 போ் பங்கேற்றனா். இவா்களில் தகுதியான 71 பேரிடம் இருந்து 71 யூனிட் ரத்தம் தானமாகப் பெறப்பட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது. ரத்த தானம் செய்தவா்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
தாராபுரம் அரசு ரத்த வங்கி மருத்துவா் சத்தியராஜ், வெள்ளக்கோவில் வட்டார மருத்துவ அலுவலா் ராஜலட்சுமி, மகாத்மா காந்தி நற்பணி மன்ற அறக்கட்டளைத் தலைவா் ஆா்.ராஜ்குமாா் ஆகியோா் முகாமுக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனா்.