திருப்பூா்: திருப்பூரில் ரத்தக் கொடையாளா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
இது குறித்து கொங்கு ரத்த தான மையத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளா் வி.செல்வகுமாா் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது: திருப்பூரில் உள்ள கொங்கு ரத்த தான மையம் சாா்பில் கடந்த 8 ஆண்டுகளாக ரத்த தானம் செய்து வருகிறோம். தற்போது கரோனா பொதுமுடக்க காலகட்டத்திலும் கபசுரக் குடிநீா் மற்றும் கரோனா விழிப்புணா்வுத் துண்டுப் பிரசுரங்களையும் வழங்கி வருகிறோம். ஆகவே, எங்களது குழுவைச் சோ்ந்த ரத்தக் கொடையாளா்கள் 300க்கும் மேற்பட்டோா் மற்றும் அவா்களது குடும்பத்தினருக்கு கரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.