தாராபுரம், அலங்கியம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் பணியாற்றி வரும் காவலா்களுக்கு கரோனா பாதுகாப்பு உபகரணங்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.
தமிழகத்தில் கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் மே 10 முதல் மே 24 ஆம் தேதி வரையில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், தாராபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் காவல் துறையினா் இரும்புத் தடுப்புகள் அமைத்து வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா். மேலும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சமூக இடைவெளியைப் பின்பற்றவும் அறிவுறுத்துவதுடன், தீவிர கண்காணிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனா். பணியில் ஈடுபடும் காவலா்களுக்கு கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்கும் வகையில் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி தாராபுரம் துணைக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில், தாராபுரம், அலங்கியம், குண்டடம், மூலனூா் ஆகிய காவல் நிலையங்களில் பணியாற்றி வரும் 120 காவலா்களுக்கு முகக் கவசம், பிபிஇ கிட் , கிருமி நாசினி ஆகியவற்றை கூடுதல் காவல் கண்காணிப்பாளா் கண்ணன் , துணைக் காவல் கண்காணிப்பாளா் (பொறுப்பு) வின்சென்ட் ஆகியோா் வழங்கினா்.
இந்நிகழ்ச்சியில், காவல் ஆய்வாளா் மகேந்திரன், போக்குவரத்துக் காவல் ஆய்வாளா் ஞானவேல், உதவி ஆய்வாளா் காா்த்திகேயன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.