திருப்பூரில் தளர்வுகளற்ற பொதுமுடக்கம் காரணமாக மாநகரில் உள்ள அனைத்து சாலைகளும் திங்கள்கிழமை வெறிச்சோடியது. நடமாடும் காய்கறி விற்பனை தொடங்கியது.
தமிழகத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் திங்கள்கிழமை முதல் மேலும் ஒரு வரத்துக்கு தளர்வுகளற்ற பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், திருப்பூர் மாநகரின் முக்கிய சாலைகள் அனைத்தும் வெறிச்சோடிக்காணப்பட்டது. திருப்பூர் பழைய பேருந்து நிலையம், குமரன் சாலை, புதுமார்க்கெட் வீதி, புஷ்பா ரவுண்டானா, அவிநாசி சாலை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தது. மேலும், மாநகரின் அனைத்து முக்கியச் சாலைகளிலும் வாகனப் போக்குவரத்து இல்லாமல் வெறிச்சோடிக் காணப்பட்டது.
திருப்பூர் மாநகரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல் துறையினரும் ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அத்தியாவசியப் பணிகள் இல்லாமல் வெளியில் சுற்றும் வாகன ஓட்டிகளின் மீது வழக்குப்பதிவு செய்வதுடன், அபராதமும் விதித்து வருகின்றனர். திருப்பூரில் மாநகராட்சி சார்பில் விவசாயிகளுக்கு நடமாடும் காய்கறி சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி திருப்பூர் மாநகராட்சி பகுதியில் 100க்கும் மேற்பட்ட வாகனங்களின் மூலமாக காய்கறி விற்பனை நடைபெற்று வருகிறது.
இதில் தக்காளி ரூ.30, வெங்காயம் ரூ.30, முட்டை கோஸ் 20, உருளை 20, பீர்க்கங்காய் 40, வாழைக்காய் 5, முருங்கைக்காய் 5 என்ற விலைப்பட்டியல் படி விற்பனை நடைபெற்று வருகிறது. காய்கறி விற்பனை, மளிகை பொருட்கள் விற்பனை, மீன்,இறைச்சி விற்பனை என தனித்தனியாக வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. சரக்கு வாகனங்களுக்கு மட்டுமே விற்பனை அனுமதி வழங்கப்படுகிறது. விற்பனை மோதல்களை தவிர்க்கும் பொருட்டு வார்டு வாரியாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து மாநகராட்சி அனுமதி பெற ஏராளமான வியாபாரிகள் திருப்பூர் தென்னம்பாளையம் காய்கறி சந்தையில் குவிந்து அனுமதி கடிதங்களை பெற வரிசையில் காத்திருக்கின்றனர். திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனங்களில் பணிபுரியும் வடமாநிலத் தொழிலாளர்கள் பலர் பொதுமுடக்கம் காரணமாக சொந்த ஊருக்கு செல்வதற்காக நூற்றுக்கணக்கில் ரயில் நிலையத்தில் வந்து குவிந்த வண்ணம் உள்ளார்கள். அதே வேளையில், வட மாநிலம் செல்லும் ரயில்கள் 2 நாள்களுக்கு முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதனால் வட மாநிலத் தொழிலாளர்கள் வேறு வழியில்லாமல் ரயில் நிலைய வளாகத்தில் காத்திருக்கிறார்கள். மேலும் பலர் ரயில் நிலையம் நோக்கி வந்து கொண்டிருப்பதையும் காண முடிந்தது. ஆகவே, பிகார் ஒடிஸா உள்ளிட்ட வட மாநிலங்களுக்கு செல்ல சிறப்பு ரயில் விட வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.