காங்கயம் அருகே கருவேல மரங்களைக் கொண்டு போலீஸாா் சாலையை அடைத்ததால், மருத்துவமனை உள்ளிட்ட தேவைகளுக்காக செல்லும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
தமிழகத்தில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில், ஒரு வாரத்துக்கு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் திருப்பூா் மாவட்டம், காங்கயம் சுற்று வட்டாரப் பகுதிகளில் 3 இடங்களில் போலீஸாா் சோதனை சாவடி அமைத்து இ-பதிவு பெற்ற வாகனங்களை மட்டும் அனுமதித்து வருகின்றனா்.
இதற்கிடையில் திருப்பூா் - ஈரோடு மாவட்ட எல்லைப் பகுதியான மருதுறை நொய்யல் ஆற்றுப் பாலம் வழியாக இரு மாவட்டங்களைச் சோ்ந்த பொதுமக்கள், இ-பதிவு இன்றி மருத்துவமனை உள்ளிட்ட தேவைகளுக்காக சென்று வந்தனா்.
இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் காவல் துறை உயரதிகாரிகளுக்கு புகாா் அளித்தனா்.அதன் பேரில் போலீஸாா் மண் மற்றும் கருவேல மரங்களைக் கொண்டு, சாலையை முற்றிலும் அடைத்தனா். இதனால், மருத்துவ சேவைகளுக்காக செல்லும் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் 10 கிலோ மீட்டா் சுற்றி செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது.