திருப்பூர்: தீபாவளிப் பண்டிகையை ஒட்டி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் கடந்த இரு நாள்களில் ரூ.16.94 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை நாள்கள் மற்றும் வார விடுமுறை நாள்களில் மது விற்பனை கூடுதலாக நடைபெறுவது வழக்கம். இதன்படி, தீபாவளிப் பண்டிகையை ஒட்டி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 240 டாஸ்மாக் மதுக்கடைகளிலும் கடந்த புதன், வியாழக்கிழமைகளில் ரூ.16.94 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது.
இதையும் படிக்க | மகளிருக்கு ஏற்ற பண்ணைக் கருவிகள் - ஓர் அறிமுகம்
இதில், புதன்கிழமை மட்டும் ரூ.6.94 கோடிக்கும், வியாழக்கிழமை ரூ.10 கோடிக்கும் மது விற்பனை நடைபெற்றது. அதே வேளையில், தீபாவளிப் பண்டிகையை ஒட்டி பெரும்பாலான பின்னலாடை நிறுவனங்களுக்கு வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரையில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆகவே, மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் வரும் நாள்களிலும் மது விற்பனை அதிகரிக்கும் என்று டாஸ்மாக் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.