வெள்ளக்கோவில் தொழில் துறையினர், தனியார் மருத்துவமனை நிர்வாகிகள், நிழல்கள் அறக்கட்டளை சார்பில் நடந்த துவக்க நிகழ்ச்சிக்கு தனியார் டெக்ஸ்டைல்ஸ் நிறுவன நிர்வாக இயக்குநர் எஸ்.எஸ்.முருகேஷ் தலைமை வகித்தார். மருத்துவர் சத்தியமூர்த்தி, மூத்த வழக்கறிஞர் வெங்கடசுப்பு, நிழல்கள் அறக்கட்டளை செயலாளர் மகாதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வெள்ளக்கோவில் வழியாகச் செல்லும் நாகப்பட்டினம் - கூடலூர் தேசிய நெடுஞ்சாலை அண்மையில் அகலப்படுத்தும் பணி நடைபெற்ற போது நூற்றுக்கணக்கான மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன.
அவற்றுக்கு ஈடாக முதல் கட்டமாக வெள்ளக்கோவில் - ஓலப்பாளையம் வரை 11 கி.மீ தூரத்துக்கு நெடுஞ்சாலைத்துறை அனுமதியுடன் சாலையின் இருபுறமும் மரக்கன்றுகள் நட்டு வளர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சேவைப் பணிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்தனர்.