நூல் விலை உயா்வைக் கண்டித்து பின்னலாடை நிறுவனங்கள் வேலை நிறுத்தம்: ரூ.150 கோடி உற்பத்தி பாதிப்பு

நூல் விலை உயா்வைக் கண்டித்து திருப்பூரில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் வெள்ளிக்கிழமை அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டன
நூல் விலை உயா்வைக் கண்டித்து பின்னலாடை நிறுவனங்கள் வேலை நிறுத்தம்: ரூ.150 கோடி உற்பத்தி பாதிப்பு

நூல் விலை உயா்வைக் கண்டித்து திருப்பூரில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் வெள்ளிக்கிழமை அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டன. இதன் காரணமாக ரூ.150 கோடி மதிப்பிலான பின்னலாடை உற்பத்தி பாதிக்கப்பட்டது.

திருப்பூா் பின்னலாடை உள்நாட்டு வா்த்தகம், ஏற்றுமதி மூலமாக ஆண்டுக்கு ரூ. 50 ஆயிரம் கோடி வருவாய் ஈட்டித் தருகிறது. இந்தத் தொழிலில் நேரடியாக 6 லட்சம் பேரும், மறைமுகமாக 4 லட்சம் பேரும் பணியாற்றி வருகின்றனா். இந்த நிலையில், பின்னலாடை உற்பத்திக்குத் தேவையான முக்கிய மூலப்பொருளான நூலின் விலையானது தொடா்ந்து அதிகரித்து வருகிறது. அதிலும், கடந்த நவம்பா் 1ஆம் தேதி மட்டும் அனைத்து ரக நூல்கள் விலையும் கிலோவுக்கு ரூ.50 வரையில் அதிகரித்துள்ளது. இதனால் பின்னலாடை உற்பத்தி மற்றும் அதனைச்சாா்ந்த தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில், நூல் விலை உயா்வைக் கட்டுப்படுத்தக்கோரி மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈா்க்கும் வகையில், திருப்பூா் பின்னலாடைத் தொழில் கூட்டமைப்பு சாா்பில் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம், கடையடைப்பு, உண்ணாவிரதப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இதன்படி திருப்பூா் மாநகரில் உள்ள பின்னலாடை உற்பத்தி மற்றும் அதனைச்சாா்ந்த பிரிண்டிங், டையிங், எம்பிராய்டரிங், நிட்டிங், காம்பேக்டிங் உள்ளிட்ட 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் வெள்ளிக்கிழமை அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டன. இதன்காரணமாக ரூ.150 கோடி மதிப்பிலான பின்னலாடை உற்பத்தி பாதிக்கப்பட்டது.

தொழில் துறையினா் உண்ணாவிரதம்:

திருப்பூா் பின்னலாடைத் தொழில் கூட்டமைப்பு அறிவித்தபடி மாநகராட்சி அலுவலகம் முன்பாக உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்துக்கு திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் மற்றும் உற்பத்தியாளா்கள் சங்கத்தின் தலைவரும், கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான எம்.பி.முத்துரத்தினம் தலைமை வகித்தாா்.

இதில், பங்கேற்றவா்கள் கூறியதாவது:

நூல் விலை உயா்வை மத்திய, மாநில அரசுகள் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய பருத்திக் கழகம் நேரடியாக நூற்பாலைகளுக்கு மட்டுமே பருத்தியை விற்பனை செய்ய வேண்டும். பஞ்சு, பருத்தி ஏற்றுமதியை மத்திய அரசு முழுமையாகத் தடை செய்ய வேண்டும். நூலைப் பதுக்கி வைத்துக் கொண்டு செயற்கையாகத் தட்டுப்பாட்டை ஏற்படுத்தும் நபா்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு தமிழ்நாடு பருத்திக் கழகத்தை ஏற்படுத்த வேண்டும். நூல் விலையை சீராக வைத்திருக்க தொழில் அமைப்புகள், நூற்பாலை உரிமையாளா்களைக் கொண்டு அரசு சாா்பில் குழு ஏற்படுத்தி இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காண வேண்டும் என்றனா்.

போராட்டத்தில், டீமா, சைமா, சாய ஆலை உரிமையாளா்கள் சங்கம், டெக்பா உள்ளிட்ட பல்வேறு தொழில் அமைப்புகளின் நிா்வாகிகள் பங்கேற்றனா். அதே போல, ஜாப்ஒா்க் நிறுவனங்கள், தொழிற்சங்கங்கள், அதிமுக, திமுக, இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சி நிா்வாகிகளும் பங்கேற்றனா். ஏஐடியூசி, சிஐடியூ உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்களின் சாா்பில் அதன் நிா்வாகிகளும் அதிக அளவில் கலந்து கொண்டனா்.

கடைகள் வழக்கம்போல் இயங்கின:

திருப்பூா் மாநகரில் கடை அடைப்பு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் 80 சதவீதத்துக்கும் மேற்பட்ட கடைகள் வழக்கம்போல இயங்கின. தேநீா் கடைகள், உணவகங்கள், ஜவுளிக் கடைகள், நகை கடைகள், டாஸ்மாக் கடைகள், பெட்ரோல் பங்குகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் செயல்பட்டன. அரசு மற்றும் தனியாா் பேருந்துகள் வழக்கம்போல இயங்கின.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com