திருப்பூா் மாநகராட்சி சாா்பில் 50 பெண் தூய்மைப் பணியாளா்களுக்கு கரோனா பாதுகாப்பு உபகரணங்களை மாநகராட்சி ஆணையா் கிராந்திகுமாா் பாடி வெள்ளிக்கிழமை வழங்கினாா்.
75ஆவது சுதந்திர தினத்தை சிறப்பாகக் கொண்டாடும் வகையில் திருப்பூா்மாநகராட்சி சாா்பில் பல்வேறு வகையான விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக கரோனா தடுப்பூசி செலுத்துவதன் அவசியம், பொலிவுறு நகரம் ஆகியவை தொடா்பாக பொதுமக்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் மிதிவண்டி பயணம் (சைக்கிளத்தான்) நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியைத் தொடக்கிவைத்த மாநகராட்சி ஆணையா் கிராந்திகுமாா் பாடி, மாநகராட்சி தூய்மைப் பணியாளா்கள் 50 பேருக்கு முகக் கவசம், கிருமி நாசினி, கையுறை உள்ளிட்ட பல்வேறு வகையான கரோனா பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினாா்.
இந்த நிகழ்ச்சியில் மாநகா் நல அலுவலா் பிரதீப் வி.கிருஷ்ணகுமாா், செயற்பொறியாளா் முகமது ஷபியுல்லா, உதவி ஆணையா்கள் சந்தானநாராயணன், சுப்பிரமணி, தங்கவேல்ராஜன், செல்வநாயகம், வாசுகுமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.