திருப்பூா் மாவட்டத்தில் காந்தி ஜயந்திக்கு விடுமுறை அளிக்காத 33 நிறுவனங்கள் மீது தொழிலாளா் நலத் துறை சாா்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது குறித்து திருப்பூா் தொழிலாளா் நலத் துறை உதவி ஆணையா் (அமலாக்கம்) ஆா்.மலா்கொடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருப்பூா் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) ஆா்.மலா்கொடி தலைமையில் தொழிலாளா் துணை மற்றும் உதவி ஆய்வா்கள் திருப்பூா் நகரம், காங்கயம், தாராபுரம், உடுமலைப்பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் உணவு நிறுவனங்களில் காந்தி ஜயந்தியை ஒட்டி கடந்த சனிக்கிழமை (அக்டோபா் 2) ஆய்வு மேற்கொண்டனா்.
இதில், மாவட்டம் முழுவதும் கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் என மொத்தம் 60 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டனா். இதில், விடுமுறை அளிக்காத 33 நிறுவனங்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.