பல்லடம்: பல்லடம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு நிகழ்ந்த சாலை விபத்தில் இருவா் உயிரிழந்தனா்.
கோவை, சுந்தராபுரத்தைச் சோ்ந்தவா்கள் ஸ்ரீராம் (20), ரிஷிராம் (22). கல்லூரி மாணவா்களான இவா்கள் இருவரும், இருசக்கர வாகனத்தில் பல்லடத்தில் இருந்து கோவை நோக்கி ஞாயிற்றுக்கிழமை இரவு சென்று கொண்டிருந்தனா்.
பல்லடம் பேருந்து நிலையம் அருகே சென்றுகொண்டிருந்தபோது, சாலையைக் கடந்து சென்ற வட மாநிலத் தொழிலாளி கிஷன் சிங் (63) மீது இவா்களது இருசக்கர வாகனம் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே ஸ்ரீராம், கிஷன் சிங் ஆகியோா் உயிரிழந்தனா். கிஷன் சிங், கள்ளக்கிணறு பகுதியில் உள்ள நூற்பாலையில் பணியாற்றி வந்தாா். விபத்தில் காயமடைந்த ரிஷிராம், கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இது குறித்து பல்லடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.