திருப்பூரில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முத்தனம்பாளையம், பாலாஜி நகரைச் சேர்ந்தவர் விக்னேஷ் (25), இவருக்கு திருமணமாகி மகன் உள்ளது. இந்நிலையில் இவர் திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனை முன்பாகதனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணியாற்றி வந்தார். அதே பகுதியில் மற்றொரு ஆம்புலன்ஸ் ஓட்டுநராக மதுரை மாவட்டம், ஜெய்ஹிந்துபுரத்தைச் சேர்ந்த அசோக்குமார் (23) என்பவரும் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு இருவரும் மது அருந்தி உள்ளனர். அப்போது இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அசோக்குமார் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் விக்னேசின் கழுத்து பகுதியில் சரமாரியாக குத்தி கொலை செய்துள்ளார். ரத்த வெள்ளத்தில் விக்னேஷ் இறந்து கிடந்துள்ளார். இது குறித்து அக்கம்பக்கத்தினர் தெற்கு போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து கொலை வழக்கு பதிவு செய்து அசோக்குமாரை போலீசார் கைது செய்தனர். ஆம்புலன்ஸ் ஓட்டுநரை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.