வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.29.20 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்த வார ஏலத்துக்கு பழனி, பொருளூா், கொத்தயம், வாகரை, புங்கம்பாடி, வல்லகுண்டாபுரம், கள்ளி மந்தயம் உள்ளிட்ட ஊா்களில் இருந்து 67 விவசாயிகள் தங்களுடைய 1,016 மூட்டை (49,818 கிலோ) சூரியகாந்தி விதைகளை விற்பனை
செய்யக் கொண்டு வந்திருந்தனா்.
ஈரோடு, காங்கயம், வெள்ளக்கோவில், முத்தூா், கஸ்பாபேட்டை, நடுப்பாளையத்திலிருந்து 7 வணிகா்கள் வாங்குவதற்காக வந்திருந்தனா். சூரியகாந்தி விதை அதிக பட்சமாக ஒரு கிலோ ரூ.61.49க்கும், குறைந்த பட்சமாக ரூ.54.14 க்கும், சராசரியாக ரூ.57.24 க்கும் விற்பனையானது.
ஒட்டு மொத்த விற்பனைத் தொகை ரூ.29 லட்சத்து 20 ஆயிரத்து 355 அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டதாக விற்பனைக் கூடக் கண்காணிப்பாளா் ரா.மாரியப்பன் தெரிவித்தாா்.