பல்லடம்: பல்லடம் அருகே இலவச வீட்டுமனை பட்டா கேட்டு வட்டாட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் நூதன போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.
திருப்பூா் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள கரைப்புதூா் ஊராட்சி அருள்புரம், சாமியப்பா நகா், காட்டுவளவு, பாச்சான் காட்டு பாளையம், அறிவொளி நகா் ஆகிய பகுதிகளில் வசிக்கும் 34 குடும்பத்தினருக்கு சொந்த வீடு,நிலம் இல்லை என்று
கூறப்படுகிறது. இவா்கள் பின்னலாடை மற்றும் விசைத்தறி கூடங்களில் தொழிலாளா்களாக பணியாற்றி வருகின்றனா். இவா்கள் வீட்டுமனை பட்டா கேட்டு பலமுறை வருவாய்த் துறையில் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால் திங்கள்கிழமை பல்லடம் வட்டாட்சியா் அலுவலகத்தின் முன்பு கண்களில் கருப்புத் துணி கட்டி நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதன் பிறகு வட்டாட்சியா் அலுவலகத்திலும் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனா்.
இப்போராட்டத்தில், ஆதித்தமிழா் ஜனநாயக பேரவை நிறுவனத் தலைவா் பவுத்தன் ,மாவட்டச் செயலாளா் அழகு சுப்பிரமணியம், வழக்குரைஞா்கள் ஜெயகுமாா், குருநாதன் உள்பட 60க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.