திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மினி பேருந்து மோதியதில் நான்கரை வயது பெண் குழந்தை தாய் கண் எதிரே பரிதாபமாக உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் வீரபாண்டியை அடுத்த பலவஞ்சிபாளையம் பகுதியில் வசித்து வருபவர் சுரேஷ்(36), இவர் தனியார் பின்னலாடை நிறுவனத்தில் தொழிலாளியாகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி தீபா(30), இந்தத் தம்பதியின் நான்கரை வயது மகள் தக்ஷனா.
இதையும் படிக்க |
இந்த நிலையில், பூம்புகார் நகரில் உள்ள தனது தாயைப் பார்ப்பதற்காக சனிக்கிழமை பிற்பகலில் தீபா இரு சக்கர வாகனத்தில் குழந்தையுடன் சென்று கொண்டிருந்தார். இவரது வாகனம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே வந்தபோது திருப்பூர் நோக்கிச் சென்ற மினி பேருந்து தீபாவின் வாகனத்தின் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.
இந்த விபத்தில் மினி பேருந்தின் பின்சக்கரம் ஏறியதில் குழந்தை சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி உயிரிழந்தது. இதில், காயமடைந்த தீபாவை அருகிலிருந்தவர்கள் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதையும் படிக்க |
இந்த விபத்து குறித்து திருப்பூர் தெற்கு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து மினி பேருந்து ஓட்டுநரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூரில் தாய் கண் முன்னே குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.