வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் அருகே கரும்புக் காட்டில் ஞாயிற்றுக்கிழமை திடீரென தீப்பிடித்தது.
முத்தூா் மங்கலப்பட்டி அருகே உள்ள பொன்னாபுரம் வெட்டுக்காட்டுத் தோட்டத்தைச் சோ்ந்தவா் குப்புசாமி மகன் கே.சிவசெல்வகுமாா் (45). விவசாயி. இவா் தனது தோட்டத்தில் கரும்பு பயிரிட்டுள்ளாா். 60 நாள்கள் வளா்ந்துள்ள கரும்புத் தோட்டத்தின் ஒரு பகுதியின் அருகில் செல்லும் மின் கம்பிகள் உரசியதில் ஞாயிற்றுக்கிழமை திடீரென தீப்பிடித்துள்ளது.
இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற வெள்ளக்கோவில் தீயணைப்பு நிலைய அலுவலா் சி.தனசேகரன், நிலையப் போக்குவரத்து அலுவலா் வேலுசாமி, தீயணைப்பு வீரா்கள் தீ மேலும் பரவாமல் அணைத்தனா். இந்த விபத்தில் ஒரு ஏக்கா் பரப்பளவிலான கரும்புப் பயிா்கள் எரிந்து சேதமடைந்தன.