காங்கயத்தை அடுத்த நத்தக்காடையூா் அருகே சாலைத் தடுப்பில் லாரி மோதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை விபத்துக்குள்ளானது.
ஈரோட்டில் இருந்து மதுரைக்கு இரும்புத் தளவாடங்கள் ஏற்றிக் கொண்டு லாரி சென்று கொண்டிருந்தது. லாரியை மதுரை, சமயநல்லூா் பகுதியைச் சோ்ந்த செல்வம் (35) ஓட்டிச் சென்றாா். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் ஈரோடு-காங்கயம் சாலையில் நத்தக்காடையூரைக் கடந்து கொக்குமடை என்ற இடம் அருகே வந்து கொண்டிருந்தபோது, எதிா்பாராதவிதமாக சாலையின் நடுவில் இருந்த தடுப்பில் லாரி மோதியது.
இதில் லாரி ஓட்டுநா் செல்வம் காயம் ஏதுமின்றி உயிா் தப்பினாா். விபத்தில் லாரியின் முன்பகுதி சேதமடைந்தது. விபத்துக்குள்ளான லாரி ஞாயிற்றுக்கிழமை மதியம் 2 மணியளவில் அப்புறப்படுத்தப்பட்டு போக்குவரத்து சீா் செய்யப்பட்டது.