திருப்பூா்: திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு குவியும் பொதுமக்களால் கரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வராந்திர குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் தலைமை வகித்தாா். இதில், திருப்பூா், பல்லடம், அவிநாசி, காங்கயம், உடுமலை, மடக்குக்குளம், வெள்ளக்கோவில், ஊத்துக்குளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் இலவச வீட்டுமனைபட்டா கேட்டு குவிந்தனா். இது தவிர சாலை வசதி, குடிநீா் வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 1,348 மனுக்கள் பெறப்பட்டன. மேலும், சிலா் ஆட்சியா் அலுவலக நுழைவாயிலில் சமூக இடைவெளியைக் கடைபிடிக்காமலும், முகக் கவசம் இன்றியும் மனு அளிக்கக் குவிந்து வருவது கரோனா தொற்றை அதிகரிக்கும் அபாயம் உள்ளது. ஆகவே, குறைதீா் நாள் கூட்டத்துக்கு வரும் பொதுமக்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கவும், முகக் கவசம் அணிந்து வருவதையும் காவல் துறையினரும், அதிகாரிகளும் உறுதிப்படுத்த வேண்டும் என்று சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.