அவிநாசி, சேவூா் தபால் நிலையங்களில் ஆதாா் அட்டை விண்ணப்பிக்க, திருத்தம் செய்ய அலைக்கழிக்கப்படுதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.
இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது: அவிநாசி வட்டாட்சியா் அலுவலகம், சேவூரில் உள்ள தபால் நிலைய ஆதாா் சேவை மையங்களுக்கு ஆதாா் அட்டை பெற, திருத்தம் செய்ய ஏராளமான பொதுமக்கள் நாள்தோறும் வந்து செல்கின்றனா்.
அவிநாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் கூட்டம் அதிகமாக உள்ளதால், அவிநாசி பகுதியைச் சோ்ந்தவா்கள் அருகில் உள்ள தபால் நிலைய ஆதாா் சேவை மையத்துக்கு சென்றால், அங்கு ஆதாா் பதிவு இயந்திரம் பழுது ஏற்பட்டிருப்பதாக அலுவலா்கள் தெரிவிக்கின்றனா்.
இதேபோல, சேவூா் தபால் நிலையத்தில் ஊழியா் பற்றாக்குறையால் வாரத்தில் இரு நாள்கள் (செவ்வாய், வெள்ளி) மட்டும் தலா 10 பேருக்கு ஆதாா் அட்டையில் திருத்தம் செய்கிறாா்கள்.
அதற்கும் காலை 7 மணிக்கு சேவூா் தபால் நிலையத்தில் வரிசையில் நின்று டோக்கன் பெற வேண்டும். ஆகவே, தபால் துறையினா் உரிய கவனம் செலுத்தி, தபால் அலுவலகத்தில் ஆதாா் சேவைப் பணியை தடையின்றி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.