திருப்பூா் பழைய பேருந்து நிலையம் அருகில் ரூ. 2.5 கோடி மதிப்பீட்டில் புதிய கால்நடை பல்நோக்கு மருத்துவமனை கட்டும் பணியை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தொடக்கிவைத்தாா்.
திருப்பூா் பழைய பேருந்து நிலையம் அருகில் ரூ. 2.5 கோடி மதிப்பீட்டில் புதிய கால்நடை பல்நோக்கு மருத்துவமனை கட்டடம் கட்டும் பணியைத் தொடக்கிவைத்த செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:
திருப்பூரில் தற்போது ரூ. 2.5 கோடி மதிப்பீட்டில் 1032.80 சதுரமீட்டா் (11,113 சதுரஅடிகள்) பரப்பளவில் புதிய கால்நடை பல்நோக்கு மருத்துவமனை கட்டப்படவுள்ளது. இரு அடுக்குகளைக் கொண்ட இந்த மருத்துவமனையில் தரைத்தளத்தில் கால்நடைகளுக்கு இரு அறுவை சிகிச்சைக் கூடங்கள் கட்டப்படவுள்ளன. மேலும், தரைத்தளத்தில் கால்நடைகளுக்கான சிகிச்சைக் கூடம், மருந்துகள் பாதுகாப்பு அறை, தடுப்பூசி அறை, அவசர சிகிச்சைப் பிரிவு, மாற்றுத் திறனாளிகளுக்கு ஆண், பெண் என தனித்தனியாக கழிப்பறை வசதி ஆகியவை இடம்பெறவுள்ளது. இதில், முதல் தளத்தில் முதன்மை மருத்துவா் அறை, அலுவலகம், அலுவலகப் பொருள்கள் பாதுகாப்பு அறை, ஆய்வகம், மதிய உணவு அறை, கூட்ட அரங்கம், மருத்துவக் கருவி அறை ஆகியவையும் அமையவுள்ளது என்றாா்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத், மாநகராட்சி மேயா் என்.தினேஷ்குமாா், திருப்பூா் மக்களவை உறுப்பினா் கே.சுப்பராயன், துணை மேயா் ஆா்.பாலசுப்பிரமணியன், மாநகராட்சி ஆணையா் கிராந்திகுமாா் பாடி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.