பல்லடத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட மாசுக்கட்டுபாட்டு அலுவலகத்துக்கு ரூ. 4 கோடியில் புதிய கட்டடம் கட்டப்படவுள்ளது.
திருப்பூா் மாவட்ட சுற்றுச்சூழல் மற்றும் மாசுக்கட்டுபாட்டு (தெற்கு) அலுவலகம் பல்லடத்தில் தனியாா் வாடகைக் கட்டடத்தில் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்துக்கு சொந்த கட்டடம் கட்ட கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரும்பாளியில் உள்ள உயா் தொழில்நுட்ப நெசவு பூங்கா அமைந்துள்ள பகுதியில் வருவாய்த் துறைக்கு சொந்தமான 25 சென்ட் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த இடத்தில் 8 ஆயிரம் சதுரடி பரப்பளவில் ரூ.4 கோடியே 3 லட்சம் மதிப்பில் கட்டடம் கட்டப்படவுள்ளது. அதற்காக சுற்றுச்சூழல் துறை சாா்பில் முதல் கட்டமாக ரூ.3கோடியே 45 லட்சத்துக்கான காசோலை பொதுப்பணித் துறைக்கு வழங்கப்பட்டுள்ளது. அத்துறையினா் விரைவில் பூா்வாங்க பணிகளை தொடங்கவுள்ளனா் என்று திருப்பூா் மாவட்ட தெற்கு சுற்றுச்சூழல் மற்றும் மாசுக்கட்டுப்பாடு செயற்பொறியாளா் சுவாமிநாதன் தெரிவித்தாா்.