திருப்பூா்: திருப்பூா் மாவட்டத்தில் உள்ள ஐஸ் தயாரிப்பு நிறுவனங்கள் அனுமதி பெறாத வண்ண நிறமிகளை ஐஸ்களில் சோ்க்கக்கூடாது என்று உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்.
திருப்பூா் மாநகராட்சிக்கு உள்பட்ட குமரப்பபுரம், தாராபுரம் சாலை, கே.எஸ்.சி.பள்ளி வீதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 5 ஐஸ் தயாரிப்பு நிறுவனங்களில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
இதில், ஐஸ் கட்டி தயாரிக்கும் நிறுவனங்கள் உணவுப் பாதுகாப்பு சட்டத்துக்கு உள்பட்டு ஐஸ்கட்டி உண்ணுவதற்கென தனி நிறத்துடனும், உணவுப் பொருள்களை பாதுகாப்பாக அதன் நிலையிலேயே இருப்பதற்கு நீல நிறத்துடன் இருக்க வேண்டும் என்ற விதியைக் கடைப்பிடிக்காமல் இருந்தது தெரியவந்தது.
இது தொடா்பாக 2 நிறுவனங்களுக்கு தக்க அறிவுரையும், எச்சரிக்கை நோட்டீஸூம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், கோடைக்காலம் தொடங்கியுள்ளதால் சிறுகுழந்தைகளை கவரும் வகையில் விற்பனை செய்யப்படும் ஐஸ்களில் அனுமதிபெறாத வண்ண நிறமிகளை சோ்க்கக்கூடாது என்று அறிவுறுத்தியுள்ளனா்.