திருப்பூா் அருகே உள்ள குட்டையில் அனுமதியின்றி மண் அள்ள பயன்படுத்தப்பட்ட லாரி, பொக்லைன் இயந்திரத்தை காவல் துறையினா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.
திருப்பூா் மாநகராட்சி, 60ஆவது வாா்டுக்கு உள்பட்ட எம்.புதுப்பாளையம் அருகே அரசு காலனியில் உள்ள குட்டையில் புதன்கிழமை இரவு மா்ம நபா்கள் மண் அள்ளும் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
இது குறித்த தகவலறிந்த அப்பகுதி பொதுமக்கள் சம்பவ இடத்துக்குச் சென்று மண் அள்ளப்படுவதைத் தடுத்து நிறுத்தி கேள்வி கேட்டுள்ளனா். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதைத் தொடா்ந்து பொதுமக்கள் நல்லூா் காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்தனா்.
சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினா், மண் அள்ளப் பயன்படுத்திய லாரி, பொக்லைன் இயந்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். இந்த சம்பவம் தொடா்பாக வருவாய்த் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.