திருப்பூர்: திருப்பூரில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகம் முழுவதும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வைக் கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பாக நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மண்டலச் செயலாளர் வான்மதி வேலுசாமி தலைமை வகித்தார்.
இதில், பங்கேற்றவர்கள் கூறியதாவது: மத்திய, மாநில அரசுகள் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலையை கடுமையாக உயர்த்தி வருவதால் ஏழை, நடுத்தர வர்க்கத்தினர் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகவே, அத்தியாவசியப் பொருள்களின் விலையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியம், திருப்பூர் தெற்கு மாவட்டத் தலைவர் ரத்னா ஜெ.மனோகர், செயலாளர் ஜெகநாதன், பொருளாளர் ரவிசந்திரன், வடக்கு மாவட்டத் தலைவர் கெளரிசங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பாக சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர்.