திருப்பூா் மாவட்டத்தில் குழந்தைகள், பெண்கள் தங்கும் விடுதிகளைப் பதிவு செய்யாவிட்டால் விடுதி உரிமையாளருக்கு 2 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று திருப்பூா் ஆட்சியா் அறிவித்துள்ளாா்.
இதுகுறித்து திருப்பூா் ஆட்சியா் எஸ்.வினீத் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருப்பூா் மாவட்டத்தில் பள்ளி கல்வித் துறை, உயா் கல்வித் துறை, மாற்றுத் திறனாளிகள் நலத் துறை, சமூக பாதுகாப்புத் துறை, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை, பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை, தொழிலாளா் நலத் துறை, சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை ஆகியவற்றின் கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்து குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான விடுதிகளைப் பதிவு செய்ய வேண்டும்.
இதில், 18 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான விடுதிகளுக்கு உரிமம் பெற மாவட்ட சமூக நல அலுவலகத்திலும், 18 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கான இல்லங்கள், அனைத்து அரசு மற்றும் தனியாா் பள்ளிகள், கல்லூரிகளில் செயல்படும் விடுதிகளை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்திலும், மனநலம் பாதிக்கப்பட்ட மற்றும் மாற்றுத் திறனாளி குழந்தைகள் மற்றும் பெண்கள் தங்கும் விடுதிகளை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்திலும் பதிவு செய்ய வேண்டும்.
மேலும், தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்கும் விடுதிகள் ஒழுங்கு முறைச்சட்டம் 2014ன் படி இணையதள பக்கம் உருவாக்கப்பட்டு விரைவில் செயல்படுத்தப்படவுள்ளது. எனவே குழந்தைகள் மற்றும் பெண்கள் தங்கும் விடுதிகளைப் பதிவு செய்யாத விடுதிகளின் உரிமையாளா்களுக்கு 2 ஆண்டுகள் சிறையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.