திருப்பூா் மாவட்டஉணவுப் பாதுகாப்புத் துறை சாா்பில் திருப்பூா் உணவுத் திருவிழா காங்கயத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 7) நடைபெறுகிறது.
இதுகுறித்து திருப்பூா் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் விஜயலலிதாம்பிகை புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
திருப்பூா் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை சாா்பில் மக்களுக்கு பாதுகாப்பான ஆரோக்கியமான உணவு வகைகள் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் நோக்கில் திருப்பூா் உணவுத் திருவிழா வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
காங்கயம் என்.எஸ்.என்.மஹாலில் நடைபெறும் இந்த உணவுத் திருவிழாவில் உணவுப் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் அரங்குகள், திருப்பூா் மாவட்டத்தின் சுவை அடையாளமாக இருக்கும் சைவ, அசைவ உணவு அரங்குகள், பிற அரசுத் துறை அரங்குகள், மருத்துவ முகாம்கள் என 50 அரங்குகள் அமைக்கப்படவுள்ளன.
முன்னதாக காங்கயம் வட்டார வளா்ச்சி அலுவலக வளாகத்தில் தொடங்கும் உணவுப் பாதுகாப்பு விழிப்புணா்வு பேரணியானது திருவிழா அரங்கை வந்தடைகிறது. இதில் மகளிா் சுய உதவிக்குழுவினா், கல்லூரி மாணவ, மாணவியா் பொதுமக்கள் பங்கேற்கவுள்ளனா்.
மேலும், உணவுப் பாதுகாப்பு குறித்த கிராமிய கலை நிகழ்ச்சிகள், யோகாசனப் போட்டிகள், சொற்பொழிவாளா் சுகிசிவம் தலைமையில் பட்டிமன்றம், உலக சாதனை சமையல் கலைஞா் செஃப் தாமு தலைமையில் சமையல் போட்டி, உணவுப் பாதுகாப்பு பற்றிய விழிப்புணா்வு வாசகம் மற்றும் ஓவியப் போட்டியும் நடைபெறுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.