கூலி உயர்வுப் பிரச்னைக்குத் தீர்வு காண வலியுறுத்தி தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவதாக விசைத்தறியாளர்கள் சங்கத்தினர் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
அவிநாசி ஸ்ரீ கருணாம்பிகை விசைத்தறி உரிமையாளர்கள் சங்க அவசர பொதுக்குழு கூட்டம், வெள்ளிக்கிழமை அவிநாசி தனியார் கலை அரங்கத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு சங்கத் தலைவர் என்.எம்.முத்துசாமி தலைமை வகித்தார். இதில் கூலி உயர்வுப் பிரச்னைக்குத் தீர்வு காண வலியுறத்தி திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளர்கள் ஜனவரி 9 ஆம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையில் ஜவுளி உற்பத்தியாளர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், பல்லடம் ரகத்திற்கு 15 சதவீதம், சோமனூர் ரகத்திற்கு 19 சதவீதம் என கூலி உயர்வு தருவதாகவும், 4 மாதங்கள் கழித்து மீண்டும் கூலி உயர்வு வழங்கப்படுமென இரு தரப்பிலும் ஒப்புக் கொள்ளப்பட்டது.
ஆனால் இதனை ஒப்பந்த கையெழுத்திட ஜவுளி உற்பத்தியாளர்கள் மறுத்ததால், பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. ஆகவே ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமல் புறக்கணித்த ஜவுளி உற்பத்தியாளர்களை கண்டித்தும், கையெழுத்திடும் வரை காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடர்வது, கூட்டுக் கமிட்டி முடிவு செய்திருக்கும் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்பது என்பது உள்ளிட்டத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.