விசைத்தறியாளர்கள் கூலி உயர்வு பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தி, அவிநாசி அருகே தெக்கலூரில் வெள்ளிக்கிழமை கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
கூலி உயர்வு வழங்க வலியுறுத்தி கோவை, திருப்பூர் மாவட்ட விசைத்தறி உரிமையாளர்கள் கடந்த ஜனவரி மாதம் 9 ஆம் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அமைச்சர்கள் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில் பல்லடம் உள்ளிட்ட 4 சங்கங்கள் வாபஸ் பெற்றன. ஒப்பந்த வடிவில் கூலி உயர்வு அமலாக்க வலியுறுத்தி சோமனூர் உள்ளிட்ட 5 சங்கங்கள் போராட்டத்தை தொடர்கின்றன.
இதன் ஓரு பகுதியாக, கடந்த 22 ஆம் தேதி முதல் காரணம்பேட்டையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், அவிநாசி அருகே தெக்கலூர் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் தெக்கலூர் ஊராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் மளிகை, தேனீர், உணவகங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு, வியாபாரிகள், வணிகர்கள், வேன் ஓட்டுநர்கள், உரிமையாளர்கள் ஆகியோர் கடையடைப்பு போராட்டத்திற்கு முழு ஆதரவு தெரிவித்துள்ளனர்.